Wednesday, October 2, 2013

இருபது வயதிலேயே முடி கொட்டுவதற்கான 10 காரணங்கள்...

ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கு சரி தலை முடி என்பது கூடுதல் அழகை சேர்க்கும் ஒரு விஷயமாகும். அதனால் அதை அலங்கரிக்கவும், விதவிதமான ஸ்டைல்களை புகுத்தவும், பலரும் முற்படுவர். இப்படி செய்தால் முடியில் பிரச்சனை இல்லாமல் இருக்குமா என்ன? அதிலும் முடி கொட்டுவது என்பது இல்லாமல் இருக்குமா? ஆம், அதுவும் இன்றைய சூழ்நலையில், இந்த பிரச்சனை இல்லாதவர்களே இருக்க முடியாது. இன்றைய தலைமுறைக்கு அளவிற்கு அதிகமாகவே முடி கொட்டும் பிரச்சனை நிலவுகிறது. முப்பது வயதை தாண்டுவதற்கு முன்பாகவே பலருக்கு தலை வழுக்கையாகி விடுகிறது. இது ஆண்கள் மற்றும் பெண்கள் என இரண்டு பிரிவினருக்கும் பொருந்தும். பொதுவாக ஒரு நாளைக்கு 75-100 முடி கொட்டுவது இயல்பே. அதையும் மீறி கொட்டினால் தான் அதற்கான காரணத்தை நாம் கண்டறிய வேண்டும்.

இப்போது இருபது வயதிலேயே முடி கொட்டுவதற்கான 10 காரணங்களைப் பார்ப்போம்.

வாழ்க்கை முறை-



இக்காலத்தில் இளைஞர்கள் தேர்ந்தெடுக்கும் வாழ்க்கை முறையே, முடி கொட்டுவதற்கான முக்கிய காரணமாக திகழ்கிறது. இரவு நேரம் கண் விழித்து பார்ட்டி கொண்டாடுவது பல தீமைகளை ஏற்படுத்தும். அதிலும் மதுபானம் உட்கொள்வது, புகைப்பிடிப்பது மற்றும் அங்கே வீசும் காற்று என இவை அனைத்தும் முடிக்கு எந்த நன்மையையும் செய்துவிடாது. தொடர்ந்து மதுபானம் பருகினால், உணவில் இருந்து நமக்கு கிடைக்க வேண்டிய வைட்டமின்கள் தடைபட்டு போகும். வைட்டமின் குறைபாடு ஏற்பட்டால், ஊட்டச்சத்து குறைந்து, முடிகள் பாதிக்கப்படும்.


மன அழுத்தம்-



முடி கழிதலுக்கு மன அழுத்தமும் ஒரு காரணமாகும். பரீட்சையை சந்திக்க பயம், நிராகரிப்பை ஏற்க பயம், கல்லூரியில் அனுமதி பெற வேண்டுமென பயம் என இப்படி பல காரணங்களால் இளைய தலைமுறை மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர்.


மாசு-



 மாசு மற்றும் சுற்றுப்புற சுகாதார கேடு போன்றவைகளும் கூட முக்கியமான ஒரு காரணம். உதாரணத்திற்கு, நீங்கள் ஒரு தொழிற்சாலை பக்கமாக குடியிருக்கிறீர்கள் என்றால், அங்கே நிலவும் மாசு படிந்த சுற்றுச்சூழலும், ரசாயனம் கலந்த நச்சு காற்றும், தலை முடியை வெகுவாக பாதிக்கும். இதனால் தலை முடி தன் பொலிவை இழந்து களையிழந்து காணப்படும்.


பூஞ்சைத் தொற்று-



செபோர்ஹோயிக் தோல் அழற்சி போன்ற பூஞ்சைத் தொற்று ஏற்படுவதால், தலை சருமம் அரிப்பு எடுத்து, முடி கழிதல் ஏற்படும். இவ்வகை தொற்று பெரும்பாலும் குழந்தைகள் மற்றும் விடலை பசங்களைத் தான் அதிகம் தாக்கும்


புதிய ஹேர் ஸ்டைல்-



சடையை இறுக்கமாக பின்னுவது அல்லது குதிரை வால் ஸ்டைல் என ஏதாவது புதிய ஹேர் ஸ்டைலை தேர்ந்தெடுக்கும் போது, முடியை இழுத்து பிடித்து கட்டும் போது, அவை வேரிலிருந்து பிடுங்கி கொண்டு வரலாம். இதனால் இது ஆங்காங்கே முடி இல்லாமல் ஆக்கிவிடும்.


சிகை அலங்கார பொருட்கள்-



ஹேர் ஸ்ப்ரே, ஜெல் போன்ற சிகை அலங்காரப் பொருட்களை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தினால், அது முடியின் தரத்தை குறைத்துவிடும். நாளடைவில் முடி கழிதலும் ஏற்படும். அதனால் முடிக்கு ஏற்ற ஷாம்பு மற்றும் கண்டிஷனரை தேர்ந்தெடுத்து, அதை மட்டும் பயன்படுத்துங்கள். சந்தையில் உள்ள கண்ட பொருட்களையெல்லாம் பயன்படுத்தாதீர்கள்.

பரம்பரை பிரச்சனை-




 பரம்பரை பிரச்சனையும் கூட முடியின் தரத்திற்கும், அடர்த்திக்கும் ஒரு காரணமாக அமையும். பரம்பரை பரம்பரையாக ஒரு குடும்பத்து ஆண்களுக்கு தலையில் வழுக்கை விழுந்தால், அந்த குடும்பத்தை சேர்ந்த ஆணுக்கு 30 வயதுக்கு முன்பே சொட்டை தலை உண்டாகலாம். அதை தடுக்க முடியாவிட்டாலும் கூட, வழுக்கை விழும் வயதை இன்னும் கொஞ்சம் அதிகரிக்கலாம்.


மன நோய்-



பைத்தியம், புத்தி பேதளிப்பது மற்றும் மன அழுத்தம் போன்றவைகள் ஒரு நபரை அவர்களின் முடியை பிடுங்கச் செய்யும். இப்படி செய்வதை ட்ரைகோட்டில்மேனியா என்று அழைக்கின்றனர். இப்படி பிடுங்குவதனால் தலையில் ஆங்காங்கே வழுக்கை போன்ற தோற்றம் உண்டாகும். இந்த மன நோயை சரிசெய்தால் தான், இந்த பழக்கத்தை நிறுத்தலாம்.

போதுமான தூக்கமின்மை-




 போதுமான நேரம் தூங்கினால் தான் முடி அணுக்கள் ஓய்வெடுத்து புத்துணர்ச்சி பெறும். இரவில் வீட்டில் அதிக நேரம் விழித்திருந்தால் கூட, அது முடியை பாதித்துவிடும்

நல்ல உணவு-



அதிக அளவில் காய்கறி மற்றும் பழங்களுடன் தினமும் நல்ல உணவை உட்கொண்டால், தலை முடி ஆரோக்கியமாக இருக்கும். அதிலும் முடியை பாதுகாக்க தேவையான வைட்டமின்கள், இரும்புச்சத்து மற்றும் புரதச்சத்து, உடலில் இருப்பது அவசியமானது. இது முடியை ஆரோக்கியமாக வைத்து முடி கழிதலை குறைக்கும்.

0 comments:

Post a Comment