Thursday, September 29, 2011

மன்னாரில் கொடிகட்டிப் பறக்கும் சட்டவிரோத மணல் அகழ்வு

மன்னாரில் அரச அதிகாரிகளின் ஆசியுடன் சட்டவிரோத மணல் அகழ்வு கொடிகட்டிப் பறப்பதாக அறியக் கிடைத்துள்ளது.
தலைமன்னார் கிராமத்தில் தற்போது பொலிஸாரின் ஒத்துழைப்போடு மணல் அகழ்வு மற்றும் பனை மரம் வெட்டுதல் போன்ற வேலைத் திட்டங்கள் இரகசியமான முறையில் இடம்பெற்று வருவதாக அக்கிராம மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.மன்னார் மாவட்டத்தில் மணல் அகழ்வு மற்றும் பனை மரம் வெட்டுதல் போன்ற வேலைத் திட்டங்கள் தடை செய்யப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் தமது கட்டுமானப்பணிகளுக்காக மன்னார் தீவுக்கு வெளியில் இருந்தே மணலைப் பெற்று வருகின்றனர். அதிகம் பணசெலவுகளுக்கு மத்தியிலேயே பெரு நிலப்பரப்பில் இருந்து மணலை பெற்றுக் கொள்ளுகின்றனர்.
இந்த நிலையில் தலை மன்னாரில் பொலிஸாரின் ஆதரவுடன் அக்கிராமத்தினைச் சேர்ந்த சிலரும் வேறு இடங்களைச் சேர்ந்தவர்களும் உழவு இயந்திரம் மற்றும் டிப்பர் ரக வாகனங்கள் மூலம் மணலை ஏற்றிக்கொண்டு செல்லுகின்றனர் என கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை> தலைமன்னாரில் அதிகளவான பனை வாடிகளும் காணப்படுவதினால் பனை மரங்களையும் வெட்டிக் கொண்டு செல்லுகின்றார்கள். யுத்தம் காரணமாக வடக்கில் பனை மரங்கள் அழிக்கப்பட்டமையால் பனை மரங்கள் வெட்டுவது தடை செய்யப்பட்டுள்ளதுடன் பிரதேச செயலக அனுமதி பெற்றே வெட்டப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை மீறி இங்கு பனை மரங்கள் பகிரங்கமாக வெட்டப்படுகின்றன. இது குறித்து பனை அபிருத்தி சபையிடம் புகார் செய்துள்ளதாக மக்கள் கூறுகின்றனர்.
இவ்விடயம் தொடர்பில் தலைமன்னார் பொலிஸாருக்கு பல தடவை கிராம மக்களினால் தெரியப்படுத்தியுள்ள போதும் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் கண்டும் காணாதவாறு நடந்து கொள்வதாகவும் அக்கிராம மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

0 comments:

Post a Comment