Thursday, July 19, 2012

யாழில் 85731 சதுரமீற்றர் பரப்பளவில் மிதிவெடி அகற்றப்பட்டுள்ளது!


  யாழ். குடநாட்டில் 85 ஆயிரத்து 731 சதுரமீற்றர் பரப்பளவிலும் கிளிநொச்சி மாவட்டத்தில் 2 லட்சத்து 14 ஆயிரத்து 840 சதுரமீற்றர் பரப்பளவிலும் மிதிவெடி அகற்றி முடிக்கப்பட்டு அவை கையளிக்கப்படுவதற்குத் தயார் நிலையில் உள்ளதாக யாழ். மாவட்ட மிதிவெடி செயற்பாட்டு அலுவலர் வ.முருகதாஸ் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் தெல்லிப்பழைப் பிரதேச செயலர் பிரிவின் ஜே/228 கிராம சேவகர் பிரிவில் புற்றுநோய் வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள காணியில் 22 ஆயிரத்து 559 சதுரமீற்றர் பரப்பளவு துப்புரவு செய்யப்பட்டுக் கையளிக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் 18 மிதிவெடிகள் மீட்கப்பட்டுள்ளன.யாழ்ப்பாணத்தில் சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவில் ஒட்டுப்பேலி (ஜே/330) கிராம அலுவலர் பிரிவில் 54 ஆயிரத்து 411 சதுரமீற்றர் பரப்பளவில் மிதிவெடிகள் அகற்றப்பட்டுள்ளன. இந்தப் பகுதியில் 2 ஆயிரத்து 417 மிதிவெடிகள் மீட்கப்பட்டுள்ளன.இதேபோன்று எழுதுமட்டுவாழ் பகுதியில் 31 ஆயிரத்து 320 சதுரமீற்றர் பரப்பளவில் மிதிவெடி அகற்றல் நடவடிக்கைகள் முடிவடைந்துள்ளன. இந்தப் பகுதியில் 16 வெடிக்காத வெடிபொருள்கள் மீட்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சிப் பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட 6 பிரதேசங்களில் மிதிவெடி அகற்றல் நடவடிக்கைகள் நிறைவுபெற்றுள்ளன. பொன்நகர், ஸ்கந்தபுரம், மலையாளபுரம், உருத்திரபுரம், செல்வாநகர் ஆகிய பகுதிகளில் 1 லட்சத்து 24 ஆயிரத்து 388 சதுரமீற்றர் பரப்பளவில் மிதிவெடிகள் அகற்றப்பட்டுள்ளன.இந்தப் பகுதிகளில் 462 ஆயிரம் மிதிவெடிகள் மீட்கப்பட்டுள்ளன. இதனைவிடக் கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில் கோரக்கன் கட்டுப் பகுதியில் 84 ஆயிரத்து 176 சதுரமீற்றர் பரப்பில் மிதிவெடிகள் அகற்றப்பட்டுள்ளன. இந்தப் பகுதிகளில் 101 மிதிவெடிகள் மீட்கப்பட்டுள்ளன. பரந்தன் சந்திக்கு அண்மையில் வைத்திலிங்கம் கமம் பகுதியில் 5 ஆயிரத்து 976 சதுரமீற்றர் பரப்பில் மிதிவெடிகள் அகற்றப்பட்டுள்ளதுடன் 15 மிதிவெடிகள் மீட்கப்பட்டுள்ளன. இந்தப் பிரதேசங்கள் விரைவில் கையளிக்கப்படவுள்ளதாகத் அவர் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment