யாழ். குறிகட்டுவான் பிரதேசத்தில் மாணவன் பஸ்ஸில் ஏறும்போது தவறி வீழ்ந்து பலியான சம்பவத்தில் யாழ். இந்துக் கல்லூரி நிர்வாகத்தினரின் கவனயீனமான செயற்பாடே காரணம் என தெரிவித்து கல்லூரி மாணவர்கள் இன்று வெள்ளிக்கிழமை காலை எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வீதிகளில் சைக்கிள் ரயர்களைப் போட்டு எரித்து தமது எதிர்ப்பை வெளியிட்டனர். 44 பேர் பயணிக்க கூடிய பஸ்சில் 90ற்கும் அதிகமான மாணவர்களை ஏற அனுமதித்தமை, ஒழுங்கற்ற நிர்வாக முறை காரணமாகவும், அந்த மாணவர்களோடு பொறுப்பு வாய்ந்த ஆசிரியர்கள் கூட செல்லவில்லை எனவும் குற்றம் சுமத்தினர். மாணவர்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு யாழ். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமன் சிகேரா தலைமையிலான பொலிஸார் வருகை தந்து மாணவர்களோடு கதைத்து கலைந்து செல்லுமாறு உத்தரவிட்டார். இருந்தும் மாணவர்கள் கல்லூரி மைதானத்தில் இருந்து கொண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்த மாணவர்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடர்பாக யாழ். இந்துக் கல்லூரி அதிபர் க.கணேசராஜாவிடம் கேட்டபோது: 'வருடாவருடம் திருத்தலங்களுக்கு மாணவர்கள் சுற்றுலா செல்வது வழக்கம். 85 மாணவர்கள் பயணிக்க கூடிய பஸ் ஒன்றில்தான் மாணவர்கள் சென்றனர். பெற்றோர்களின் அனுமதியுடன் இந்த மாணவர்கள் பொறுப்பு வாய்ந்த ஆசிரியர்களினால் அழைத்துச் செல்லப்பட்டனர். குறித்த மாணவர் உயிரிழந்த சம்பவம் ஒரு தற்செயலாக நடந்த விபத்து' என அவர் தெரிவித்தார். உயிரிழந்த மாணவனின் இறுதிக் கிரியைகளுக்காக உடனடியாக ஒரு லட்சம் ரூபா பணம் கொடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை இன்று காலை மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் அனாமதேய துண்டுப் பிரசுரம் ஒன்றும் பிரசுரிக்கப்பட்டது. குறித்த துண்டுப்பிரசுரத்திலே யாழ். இந்துக் கல்லூரி அதிபரின் பல அத்துமீறிய செயல்களை சுட்டிக்காட்டி, ஊழல் நிறைந்த அதிபர் பதவி விலகும்வரை தமது சாத்வீக போராட்டம் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.











0 comments:
Post a Comment